தாய்


இன்னும் ஓரிரு வருடங்களில் செத்துவிடலாம். அல்லது இனி இதை வைத்துத் தொழில் நடத்த முடியாது என்று எப்போது அதன் சொந்தக்காரருக்குத் தெரியவருகிறதோ அப்போது அது ஏதாவது ஒரு கசாப்புக் கடைக்காரனுக்கு அடிமட்ட விலையில் போய்ச் சேர்ந்துவிடலாம். நிச்சயமாக சொல்வதற்கில்லை.  கூட்சு வண்டியினை ஓட்டி வந்தவருக்கும் வயது அதிகம் இருக்கும். குத்துமதிப்பாக சொல்லப்போனால் எழுபது அல்லது எழுபத்தியொன்று.  குளிரைத் தாங்கக் கூடிய பழைய மொத்தமான அங்கி ஒன்றை அணிந்திருந்தார்.  அதை அவர் வாங்கும் போது நீலமாக இருந்திருக்க வேண்டும்.  இப்போது நிறம் மாறி ஒருவித பழுப்பு நிறத்தில் இருந்தது.  தொக்கையான மனிதர்.  கைகள் குள்ளமாக, உருண்டையாக இருந்தன.  கிட்டே போய் முகர்ந்து பார்த்தால் அவரிடமிருந்து மலையாடு வாசனை வரும்போல் தோன்றியது.  தன்னுடைய வேலையையும் சேர்த்துத் தன் குதிரை கவனித்துக்கொள்ள இவர் நிம்மதியாக அடிக்கொரு தடவை தூங்கியவண்ணம் இருந்தார்.  அனேகமாக இந்த வண்டி கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்திலிருந்து தன் பயணத்தைத் தொடங்கி, மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்திற்கோ அல்லது நகரத்திற்கோ சென்று கொண்டிருக்கலாம்.  அந்த வண்டிக்குள்தான் போர்வை ஒன்றினால் தன் உடம்பு முழுக்கப் போர்த்திக்கொண்டு  விளாமிடிர் யோகொவிச் உட்கார்ந்திருந்தான்.


 

அது ஒரு மழைக்காலம். காலையில் இருந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது.  இன்னும் தீரவில்லை. எப்போது தீரும் என்று அடித்துச் சொல்லமுடியாதபடி சிலநேரங்களில் குறைந்தும், சிலநேரங்களில் கூடியும் கொட்டிக்கொண்டு இருந்தது. சின்னவயதில் மழை வந்தால் நானும் தங்கை அன்னாவும் மழையில் நனைந்துகொண்டே பாட்டுப்பாடுவோம்.  தெருவில் நாங்கள் மட்டுமே இருப்போம்.  வேறு ஒருவரும் இருக்கமாட்டார்கள்.  ஒருவிதத்தில் அது எங்களுக்குச் சுதந்திரமாகவும் கூடுதல் உற்சாகமாகவும் இருக்கும். என்தங்கைக்கு மழை என்றால் அலாதிப் பிரியம்.  “

மழை எங்கே இருந்து அண்ணா வருகிறது?”

“வானத்திலிருந்து.”

“வானத்தில் கடல் இருக்கிறதா அண்ணா?”

அப்பொழுது எனக்கும் சிறிய வயது என்பதால் வானத்தில் கடல் இருக்கிறதா இல்லையா என்பது பற்றிய சமாச்சாரம் எல்லாம் தெரியாது.  “ம்ம்ம் இருக்கலாம்” என்று பதிலுரைத்துவிட்டு அவள் அடுத்த கேள்வியைக் கேட்க ஆரம்பிக்கும் முன் சிட்டாகப் பறந்துவிடுவேன்.  அதுஒரு காலம்.  இப்பொழுது நான் வளர்ந்து பெரியவன் ஆகி விட்டேன்.  என்னுடைய நிலை தெரியாமல் கன்னாபின்னா என்று கொட்டிக்கொண்டிருக்கும் போது ’முட்டாள் மழை… நேரம் காலம் தெரியாமல் இப்படி கொட்டித்தொலைக்கிறதே’ என்று கடிந்து கொள்வேன். 

அப்படிப்பட்ட ஒரு சலிப்பான மழை நாளில்தான் என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்தது.

 என் அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது.  இருந்தாலும் பிடிக்கும்.  என்னைப் பெற்றவர் அல்லவா? அடிக்கடி என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வரும். என்றாலும், இது கொஞ்சம் பெரிய சண்டையாகத் தெரிந்தது.  முடிவதற்குக் குறைந்தது இன்னும் மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் பிடிக்கும் என்று தோன்றியது.  அப்பா ஒரு விவசாயி.  சொந்தமாக ஒரு வயல் நிலம் வைத்திருக்கிறார்.   அதில் அவர் கிழங்கு பயிரிடுவார்.  அவரின் கிழங்கு அனேகமாக உள்ளூர்ச் சந்தைகளில்தான் எடுபடும் என்றாலும் அதிசியமாக எப்போதாவது அசலூர் வியாபாரிகள் வந்து நல்ல விலையில் வாங்கிப் போவார்கள்.  அம்மாதிரி நாட்களில் அப்பாவுக்கு சந்தோசமாக இருக்கும்.  எனக்கும் நல்ல ஷு எடுத்துத் தருவார்.  நான் அதை அணிந்துகொண்டு ஊரில் இருக்கும் எல்லா நண்பர்களிடமும் என்னுடைய அப்பா வாங்கித்தந்தது என்று பெருமையாக சொல்லித் திரிவேன்.  நான்கு மாதங்களுக்குத் தங்காது.  கிழிந்து விடும்.  (அல்லது கிழித்து விடுவேன்)  அந்தமாதிரி நேரங்களில் என் அப்பா என்னை அடிக்க மாட்டார்.  கிழிந்தால் என்ன, அடுத்த தடவை வாங்கினால் போகிறது என்று கூறி என்னை கட்டிப்பிடித்து நெற்றியின் நடுப்பகுதியில் ஆறுதலாக முத்தமிடுவார்.  அப்படியான அப்பாவின் சின்னச் சின்ன செய்கைகள் கூட எனக்கு அம்மாவை விட அப்பாவின் மீது கூடுதல் பிரியம் வருவதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.  

என் அம்மா கஸகஸ்தானைச் சேர்ந்தவள்.  அவள்  சிறுமியாக இருக்கும் போதே தன் அம்மாவுடன் ரஷ்யாவிற்கு வந்துவிட்டாள்.  சொந்தமாக மலையாடு வைத்திருப்பவர்கள் தங்கள் மலையாடுகளை என் அம்மாவிடம் கொடுப்பார்கள். அவள் அவற்றை காலையிலிருந்து மாலை வரை மேய்த்துவிட்டு வருவாள். ஐந்நூறு அல்லது அறுநூறு ரூபிள் தேறும். அதை யாருக்கும் கொடுக்க மாட்டாள். எங்கள் வீட்டு நிலவறையின் கீழே பழைய பொருட்களை வைப்பதற்க்கான ஒரு அறை இருக்கிறது. நிறைய பிரம்புக் கூடைகள் இருக்கும். எல்லாம் பழைய தூசி படிந்த பிரம்புக் கூடைகள். ஒவ்வொரு பிரம்புக் கூடையையும் எடுத்து கீழே வைத்துவிட்டு கடைசியாக இருக்கும் பிரம்புக் கூடையினுள் அதனை ஒளித்து வைப்பாள். யாராலும் அதை எடுக்கமுடியாது. நிலவறைக் கதவின் சாவி அம்மாவிடம்தான் எப்போதும் இருக்கும். இதுவரைக்கும் எனக்கென்று எதுவும் அவள்  செய்ததில்லை. ஏதாவது  கேட்டால் “எதற்கு என்னிடம் கேட்கின்றாய் ? உன் அப்பாவிடம் போய் கேட்க வேண்டியது தானே?” என்பாள். அப்படியான அம்மாவின் சின்னச் சின்ன செய்கைகள் கூட அவர் மீது எனக்கு வெறுப்பு உண்டாவதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். 



சண்டை இன்னும் ஓய்ந்தபாடில்லை. நாழிகை ஆகஆக சண்டையின் உக்கிரம் கூடிக்கொண்டே போனதுதான் மிச்சம். பொருட்கள் கூட பறக்கத் தொடங்கியிருந்தன. எனக்கு எங்கேயாவது ஓடிப்போய் விடலாமா என்று நினைக்கும் அளவுக்கு எரிச்சலாக இருந்தது. எதற்கு சண்டை என்றே விளங்கவில்லை. வழமையாக அப்பா குடித்துவிட்டு வரும்போதான் அம்மா கோபத்தில் கத்துவாள்.  இன்றைக்கு அப்பா குடித்தது போல் தெரியவில்லை. பிறகு எதற்காகச் சண்டை?  யோசித்தால் காரணம் சிக்கும் என்று தோன்றவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு ஓரமாகப் போய் நான் நின்றுகொண்டிருந்த போதுதான், பறந்துகொண்டிருந்த பொருட்களில் ஒன்று என் அம்மாவின் தலை ஓட்டைப் பதம் பார்த்தது. அடி பலமாகப் பட்டிருக்க வேண்டும். அடிவிழுந்த கொஞ்ச நேரத்திலேயே மண்டை ஓட்டிலிருந்து ரத்தம் வழியத்தொடங்கியது. அப்பாவுக்கு இது தெரிந்திருக்குமோ தெரியாது . ஆத்திரத்தில் கையில் கிடைத்த ஒரு பொருளை எடுத்து வீசி இருக்க வேண்டும். வீசிய கையுடனேயே விருட்டென்று வெளியே கிளம்பி விட்டார். அப்பா வெளியே படலையைத் திறக்கும் சத்தம் கேட்கும் போதுதான் அம்மா ரத்தம் வழிந்த பகுதியை கையால் பிடித்துக்கொண்டு நிலத்தில் சரியத் தொடங்கினார். அநேகமாய் இந்த விபரமெல்லாம் அப்பாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் அம்மாவின் கிட்டே போய் பார்த்தேன். நரையும், கருப்பும் கலந்திருந்த அம்மாவின் தலைமுடிக் கற்றையை விலக்கிப் பார்த்த போது பிளவுபட்டிருந்த ஓட்டையும், அதனூடே வழியும் ரத்தமும் அப்பட்டமாய்த் தெரிந்தது. 

அன்று போன அப்பாதான். 

அதன் பிறகு வீடு திரும்பவே இல்லை. ஒரு தந்தி கூட போடவில்லை. ஆரம்பத்தில், அம்மா எங்கள் கிராமம் முழுவதும் சுற்றித் திரிந்தாள். அப்பாவைப் பற்றிய எந்த விபரமும் தெரியவில்லை. ஒவ்வொருதடவை படலை திறக்கப்படும் சத்தம் கேட்கும் போதும் அப்பாதானா என்பதுபோல் எட்டிப் பார்ப்பாள். இல்லை என்று தெரிந்ததும் அவள் முகத்தில் ஏமாற்றமும், சோகமும் கலந்திருக்கும் .அப்படியான வேளைகளில் ’வீட்டை விட்டு விரட்டி விட்டு இப்பொழுது தேடுகிறாயா ? நாயே, உன்னால்தானே அவர் வீட்டை விட்டு போனார்?’ என்று உள்ளுக்குள் கருவிக் கொள்வேன். 

அப்பா இல்லாதது எனக்கும் கவலைதான். வீட்டில் ஏதோ ஒன்று குறைவதைப் போல் உணர்ந்தேன். நாளாக நாளாக எனக்கும் அம்மாவுக்கும் அப்பாவின் நினைவு வருவது கொஞ்சம் குறைந்திருந்தது. படலைச் சத்தம் கேட்கும் போது ஓடிவருவதை அம்மா நிறுத்தி இருந்தார். வழமைபோல் மலையாடுகளை மேய்க்கப் போனாள். அப்பா விவகாரம் கிராமத்துக்குத் தெரிந்திருந்ததால் அம்மாவின் வருமானம் கொஞ்சம் அதிகமானது. அதில் பன்றிக்கால் சூப்பும், வான்கோழிக் கறியும், ரொட்டிகளும் செய்து தந்தாள். அப்பா இருக்கும் போதும் பன்றிக்கால் சூப் செய்து தந்திருக்கிறாள் என்றாலும் அன்றைய பன்றிக்கால் சூப் கொஞ்சம் அதிகப்படியான சுவையுடன் இருந்தது. அம்மா மாறி விட்டாள். பன்றிக்கால் சூப்பை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. அன்று என்னை நகரத்துச் சந்தைக்கு அழைத்துச் சென்று மூவாயிரம் ரூபிளில் ஒரு புதிய ஷு வாங்கித் தந்தாள். வீடு திரும்பியதும் அவளைக் கட்டிபிடித்து நெற்றியின் மையத்தில் முத்தம் கொடுக்க வேண்டும் போல் தோன்றியது. வருடங்கள் ஓடிவிட்டன. என் அம்மாவின் முகத்தில் இப்பொழுது நிறைய சுருக்கங்கள் விழுந்துவிட்டன. பற்கள் இன்னும் முழுவதுமாக விழுந்துவிடவில்லை. என்றாலும், ஒருவித பழுப்பு நிறத்தில் காணப்பட்டன. முடிகளின் அடர்த்தி குறைத்து குதிரையின் வாலினைப் போல் காட்சி அளித்தது. அளவுக்கு அதிகமாக குண்டாகி விட்டாள். அப்படி ஆனதால் தான் என்னவோ அவள் உயரமும் கொஞ்சம் குறைந்தது போல் தோன்றியது. ரொம்பவும் மெதுவாக நடந்தாள். கூன் கண்டிருந்தது. முன்பு போல் அவளால் தனியே நடக்க முடியவில்லை. ஒரு கைப்பிடி தேவைப்பட்டது. எப்பொழுதும் ஒரு சாம்பல் நிற மேலாடை அணிந்திருப்பாள். அதை அவள் அப்பாவின் நினைவாக அணிந்திருக்கக் கூடும். 

அம்மாவுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போனது. அம்மாதிரி நேரங்களில் வீட்டின் பின்புறத்தில் வளர்ந்திருந்த பட்டையை அவித்துக் குடிப்பாள். அப்படியும் இருமல் நின்றபாடில்லை. ‘கொக்கொக்’ என்று நிமிடத்திற்கு ஒருதடவை இருமிக் கொண்டே இருந்தாள். இழுத்து, இழுத்துப் போட்டது. அப்படியிருந்தும் நேரம் கிடைக்கும்போது மலையாடுகளை மேய்க்கப் போனாள் .”இன்று நீங்கள் போகவேண்டாம், நான் போகின்றேன்” என்று சொன்னாலும் கேட்க மாட்டாள். வரிந்து கட்டிக்கொண்டு போவாள். சிலநேரங்களில் ஒளிந்திருந்து அவளைக் கண்காணிப்பேன். மலையாடுகளை ஒரு இடத்தில் மொத்தமாக மேயச் செய்துவிட்டு ஒரு மரத்தின் கீழே போய் உட்காருவாள். இருமல் வரும் போது பட்டையை எடுத்து எச்சிலால் அதை ஈரமாக்குவாள். பின் பட்டை உலர்ந்து போகும் .உலர்ந்து போன பட்டையைக் கைகளால் உருட்டி உருட்டி பந்துபோல் செய்து அப்படியே வாயைத் திறந்து நாக்கை நீட்டி தொண்டைக் குழியில் போடுவாள். ‘கொக் கொக்’ சத்தம் சுத்தமாக நின்றுபோய் விடாது. என்றாலும், கொஞ்ச நேரத்துக்கு இருமல் இம்சை அவளுக்கு இருக்காது. 

பெரும்பாலும் ஏதோ யோசனையில்தான் இருப்பாள். சிலசமயம் தானாக ஏதோ கதைப்பாள். என்ன கதைக்கிறாள் என்று கிட்டே போய் காதைக் கொடுத்து கேட்டாலும் விளங்காது. சிலநேரம் அன்றைக்கு ஏன் அப்பாவுடன் சண்டை பிடித்தேன் என்று யோசிக்கிறாளோ, அல்லது தன்னுடைய வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி அர்த்தமில்லாமல் ஒரு இலக்கு இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது என்று யோசிக்கிறாளோ, அல்லது தனக்கு இப்படியான அவலம் நிரம்பிய, துணை இல்லாத வாழ்க்கையைத் தந்து விட்டிருந்த கடவுள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பான் என்று யோசிக்கிறாளோ  எதுவுமே தெரியவில்லை. நான் கூட கேட்டதில்லை. தனியாக இருக்கும்போது கேட்க வேண்டும், கேட்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அவள் முகத்தை நேருக்கு நேர் சந்திக்கும்போது என்ன காரணமோ, கேட்கவேண்டும் என்று நினைத்திருந்த நிறைய கேள்விகள் கேட்கப்படாமலே போய்விட்டன. 

அன்றொருநாள், வெளியே மழை இன்னும் கொட்டவில்லை. சிறிது நேரத்தில் கொட்டினாலும் கொட்டலாம். அம்மா அப்பொழுதுதான் மலையாடுகளை மேய்த்து விட்டு வந்திருந்தாள். வந்தவள் அவசரம் அவசரமாய் என்னைத் தேடினாள். என்னைக் கண்டு பிடித்ததும் அவள் முகத்தில் சிறிது பிரகாசம் தெரிந்தது. நிலவறைக்குச் சென்றாள். பழைய பிரம்புக் கூடைகள் இறக்கப்படும் ஓசை மெதுவாகக் கேட்டது. அதனைத் தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் மறுபடியும் அவை இருந்த மாதிரியே வைக்கப்படும் ஓசை கேட்டது. படிகளில் ஏறி வரும்பொழுது அவள் அணிந்திருந்த பாவாடையில் கால்கள் சிக்குப்பட்டுத் தடுமாறி விழப் பார்த்தாள். ஆனால் விழவில்லை. எப்படியோ சுதாகரித்துக் கொண்டாள். இரண்டு கைகளையும் பக்கச்சுவர்களில் அழுத்தித் தேய்த்து தான் விழாதவாறு பாதுகாப்பாக வர முயற்சி செய்யும் பிரயத்தனம் அவளில் தெரிந்தது. அவள் கையில் ஒரு பழந்துணி இருந்தது. நேராக என்னிடம் வந்தாள். வந்து என்னருகில் அமர்ந்து கொண்டாள். அவளால் அதை இலவாகச் செய்யமுடியவில்லை. தன்னுடைய குள்ளமான கைகளை நிலத்தில் ஊன்றிக் கொண்டே உட்கார்ந்தாள். மூக்கினால் பலமாக மூச்சு விடுவது பெரும் ஓசை போல் கேட்டது. இன்னும் சிலவருடங்களில் செத்துவிடுவாள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். என் பக்கத்தில் உட்கார்ந்தவள் கையில் இருந்த பழந்துணியை என்னிடம் கொடுத்து பிரித்துப் பார்க்கச் சொன்னாள். பிரித்துப் பார்த்தேன். உள்ளே ஐம்பது, இருபது, பத்து, நூறு என்ற கணக்கில் சில கசங்கிய ரூபிள் தாள்கள் இருந்தன. எடுத்துக் கொள். 

“இவற்றையெல்லாம் நான் உனக்காகவே சேர்த்து வைத்திருந்தேன். எப்போது இவை உனக்குத் தேவைப்படலாம் என்று தோன்றுகிறதோ அப்போது இதை உன்னிடம் ஒப்படைக்கலாம் என்று வைத்திருந்தேன். இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். வைத்துக் கொள். இதை நீ எப்படி வேண்டுமனாலும் செலவழித்துக் கொள்ளலாம்.”

அவளிடம் சொல்வதற்கு எனக்கு எவ்வளவோ வார்த்தைகள் இருந்தாலும் ஒன்றுமே சொல்லாமல் எழும்பிப் போகும் அவளையே மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.


சிறிது நாட்கள் கழிந்திருந்தன. அம்மாவின் மீது எனக்கு அதிகப்படியான பாசம் வந்திருந்தது. அவளை கவனிக்கத் தொடங்கினேன். அவள் பெருத்துக் கொண்டே போவது தெரிந்து கொஞ்சம் பயமாக இருந்தது. வயது எத்தனை என்று தெரியவில்லை. எண்பதிற்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். அது சரிதானா?. அவளிடம் கேட்க வேண்டாம் என்று தோன்றியது. கேட்டால் துக்கம் அதிகமாகும். உண்மை இப்படித்தான் இருக்கும்  என்று முன்கூட்டியே நாம் அறிந்துவைத்திருந்தாலும் நிச்சியமாக அப்படித்தானா என்று ஆராயாமல் இருப்பது மேல். களைப்பில் அம்மா நிம்மதியாகத் தூங்குவது தெரிந்தது. அதே ஆடையுடன்தான் தூங்கிக் கொண்டிருந்தாள். நாளை மறுபடியும் அதே ஆடையுடன்தான் ஆடு மேய்க்கப் போவாள். அவள் எப்பொழுது கடைசியாகக் குளித்தாள் என்று தெரியவில்லை. மலையாடுகளுடன் பழகிப் பழகி அவளிடமும் மலையாடு வாசனை வந்தது. அவள் எனக்காகத் தான் உழைக்கும் பணத்தையெல்லாம் சேமித்து வைத்திருக்கிறாள் என்பதை நினைத்துப் பார்த்தபோது தொண்டைக் குழியில் ஏதோ இறங்குவதைப் போல் உணர்ந்தேன்.  யோசிக்க ஆரம்பித்தேன். இவள் இன்னும் நிறைய நாள் இருக்கப்போவதில்லை. குறைந்தது இரண்டு வருடம், அல்லது மூன்று வருடம். மகன் என்று நான் மட்டும்தான் இருக்கிறேன். அன்னா இனி வருவாள் என்று தோன்றவில்லை. அப்பா போனபிறகு எனக்காக வாழ்ந்தவள் இவள் மட்டும்தான். இனியும் இவள்தான் என் வாழ்க்கையில். மகனென்று பிறந்து இதுவரைக்கும் எதுவும் செய்ததில்லை. இந்த வயதில் கூட எனக்காக வேலை செய்கிறாள். இவளுக்காக நான் என்ன செய்தேன்? ஒரு மேலாடை வாங்கிகொடுத்திருப்பேனா? இவள்தான் என் தாய். இவள்தான் என்னைப் பெற்றவள். இவள்தான் என்னை வளர்த்தவள். இவள்தான். இவளேதான். நான் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கினேன்.

அடுத்த நாள் நகரத்து சந்தைக்குச் சென்று ஒரு அழகான கட்டம் போட்ட கையுறை வாங்கினேன். அதை அம்மா விரும்புவாள் என்று எனக்குத் தெரியும். அவளுக்குக் கையுறை என்றால் மிகவும் பிடிக்கும். இளமையாக இருக்கும் போது அவள் நிறைய கையுறைகள் வைத்திருந்தாள். சிகப்பு, நீலம், ஊதா, மஞ்சள் என்று விதம் விதமாக வைத்திருந்தாள். குளிர் காலம் தொடங்கினால் அவற்றை எல்லாம் அவள் பிரியமாக அணிந்து பார்ப்பாள். இன்றைக்கு நீலம் என்றால், நாளைக்கு ஊதா, நாளைக்கு ஊதா என்றால் நாளை மறுதினம் சிகப்பு. 

நான் வீடு வந்தேன். அம்மா இன்னும் வரவில்லை. அவள் வருவதற்கு இன்னும் நேரமிருக்கிறது. கதவினை திறந்தேன். கதவின் கீழே கடிதம் ஒன்று கிடந்தது. கையிலெடுத்துப் பார்த்தேன். முகவரி பிட்டர் ஸ்பெர்க் என்று இருந்தது. அவசரமில்லாமல் பிரித்துப் பார்த்தேன். அப்பாதான் அனுப்பியிருந்தார்.

அன்புள்ள மகனுக்கு, 

என்னை மன்னித்துவிடு. நான் செய்தது துரோகம் என்று எனக்குத் தெரியும். அதிலும் முக்கியமாக உனக்குச் செய்தது. என்ன செய்வது, காலம் ஒரேமாதிரி இருப்பதில்லையே? ஒருவரை ஒருவர் பிரிவது நிதர்சனம் என்றாலும் எங்கள் வாழ்க்கையில் அது சீக்கிரமே நடந்து விட்டது என்று நினைக்கிறேன். இது எல்லாவற்றுக்கும் கர்த்தரிடம் பதில் இருக்கிறது மகனே. அவர் சொல்கிறார், பிரிவு என்பதும் துக்கம் என்பதும் நிரந்தரமல்ல. ஆனால் அவை வந்தே தீரும். நீ வேண்டுமென்றால் என்னுடைய அறையில் ஒரு கருப்பு விவிலியப் புத்தகம் இருக்கிறது. அது அப்போதே பழுதாகிப் போய்த்தான் இருந்தது. இப்போது இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. உன் அம்மா எடுத்து வீசி இருக்கலாம். அவளுக்குத்தான் என்னை பிடிக்காதே…நேரம் இருந்தால் அந்தப் புத்தகத்தை எடுத்துப் படி. நான் மேற்சொன்ன விபரம் அதில் இருக்கிறது. இப்போது நான் பிட்டர்ஸ்பெர்கில்  இருக்கிறேன். ஒரு பணக்கார சீமாட்டியுடன். அவள் கணவனை இழந்தவள். பெரும் பணக்காரி. நான் உன்னைப் பற்றி அவளிடம் நிறையச் சொல்லி இருக்கிறேன். அவளும் ஆசையுடன் கேட்பாள். உன்னையும் இங்கே அழைத்து வந்து தன்னுடனே வாழ வைக்க முடியுமா என்று கேட்டாள். இங்கே வந்தாய் என்றால் உனக்கு சொர்க்கம் காத்திருக்கிறது. உன் தாய் வேண்டாம். அவள் ஒரு மிருகம். அவளுக்கு மலையாடுகளும், ரூபிள்களும்தான் முக்கியம். நானோ  நீயோ அல்ல ; என்ன சொல்கிறாய் ? ஆ…சொல்ல மறந்து விட்டேன். உன் தங்கை அன்னாவும் இங்கே என்னுடன்தான் இருக்கிறாள். போன வருடம்தான் ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

இப்படிக்கு,

அப்பா.

கடிதத்தைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. குரல்வளையை நசித்தே அவரைக் கொல்லவேண்டும் போல் தோன்றியது. என் அம்மாவைப் பார்த்தா மிருகம் என்றாய். என் அம்மாவைப் பார்த்தா பணத்தாசை பிடித்தவள் என்றாய். உனக்கு என்னடா தெரியும் என் அம்மாவைப் பற்றி. என் அம்மா மேரி மாதாவுக்கு ஒப்பானவள். அவளது அன்பும், பாசமும் நிகரில்லாதவை. எவ்வளவு பணம் கொடுத்தும் அவற்றை உன்னால் வாங்க முடியாது. வானத்தில் இருந்து குதித்த சம்மனசுவைப் போன்றவள் அவள். எப்படி உனக்கு மனம் வந்தது என் தாயைப் பார்த்து அப்படிச் சொல்ல? நீ அவளை விட்டுப் பிரிந்து போனதும் அவள் அதற்காக எவ்வளவு வருந்தினாள் என்று உனக்குத் தெரியுமா?  நீ எப்படி அவளுக்குத் துரோகம் செய்யலாம்?

அம்மா வந்தாள். கொஞ்சம் நனைந்திருந்தாள். இனியும் இவளைத் தவிக்க விட முடியாது. வயது கூடிக்கொண்டே போகிறது. இப்படியே தொடர்ந்து தனிமையிலே இருந்தால் சிலநேரம் அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும். சிலநேரங்களில் சுவருடன் எல்லாம் பேசுகின்றாள். என்ன பேசுகிறாள் என்றே புரிவதில்லை. தனிமை அவளை மிகவும் பாதித்து விட்டது. நடுச் சாமங்களில் குந்தியிருந்து எதையோ யோசித்து அழுகிறாள். சிலநேரங்களில் மௌனமாக அழுகிறாள். சிலநேரங்களில் வாய்விட்டுப் பெரும்குரலெடுத்து அழுகிறாள் . நானே அதைக் கேட்டிருக்கிறேன். ஒரு ஏழைக்குத் தன்னுடைய சோகங்களை எல்லாம் கண்ணீராக மட்டுமே வெளிப்படுத்த முடியும் என்பதை நான் அவள் கண்ணீரில் கண்டு கொண்டேன். எதற்காக அழுகிறாள் என்பதை அவள் கடைசி வரைக்கும் வாய் திறந்து சொல்லவே மாட்டாள். முடிவெடுத்து விட்டேன். என் அம்மாவுக்கு நான் செய்யும் ஒரே ஒரு நல்ல காரியம் இதுதான். இனியும் இவளைத் தவிக்க விடக் கூடாது .இப்போதே இவளை அப்பா இருக்கும் இடத்துக்கு அழைத்துப் போகிறேன். அழைத்துப்போய் அம்மா என்ற வார்த்தைக்கு இருக்கும் புனிதத்தைப் பற்றி விளக்குகிறேன். இவளை போல் ஒரு அம்மா உண்டா என்று கேட்கிறேன். பணத்துக்காகக் கட்டியவளையும், பிள்ளையையும் தவிக்க விட்டுவிட்டு போனாயே அப்படிப்பட்ட நீ மனிதனா அல்லது எந்தவித பலனையும் எதிர்பாராமல் தினந்தோறும் உன்னையே நினைத்துத் துன்பப்படும் இவள் மனுஷியா என்று கேட்கிறேன். என் தாயின் காலடியில் உன்னை மண்டியிட வைக்கிறேன். பாதகா, இரு வருகிறேன்.

திடீரென்று, வண்டி சற்றுக் குலுங்கியது. விளாமிடிர் யோகொவிச் முழித்துக் கொண்டான். பக்கத்தில் அவன் அம்மா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். வாய் பிளந்திருந்தது. அவள் மூச்சு விடுவது பெரும் சத்தமாய்க் கேட்டது. சிறிது நேரத்துக்குப் பின் அவன் வண்டியை நிறுத்தச் சொல்லி கிழவருக்குக் கட்டளையிட்டான். வண்டி நின்றது. முதலில் அவன் கீழே இறங்கினான். பின் தூங்கிக் கொண்டிருந்த தன் தாயை அள்ளி எடுத்தான். தான் தூக்கப்படுவது உணர்ந்து தாயும் முழித்துக் கொண்டாள். 

“எதற்காக என்னைக் கீழே இறக்குகிறாய் யோகோ ?”

“கொஞ்சம் இருங்கள் தாயே.”

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு யோகொவிச் இப்படிச் சொன்னான்.

“தாயே கோபித்துக் கொள்ளாதீர்கள் ; சிறிது நேரம் இங்கேயே இருங்கள், நான் கொஞ்ச நேரத்தில் மறுபடியும் வந்து உங்களை அழைத்துப் போகிறேன்.” 

“சரி போ. ஆனால், நிச்சயமாகத் திரும்பி வந்துவிடுவாய்தானே?”

“நிச்சயமாக வந்துவிடுவேன்.”

“நீ நல்லவன் என்பது எனக்குத் தெரியும் யோகோ, என்னைத் தனியே விட்டுவிட்டு எங்கேயும் போய்விடமாட்டாய் என்பதும் எனக்குத் தெரியும். நான் அவ்வாறு கேட்டது உன் மனதைப் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடு.”

வண்டியில் ஏறினான். வண்டியைப் புறப்படச் சொன்னான். அவன் தாய் இவனைப் பார்த்து சிநேகமாய் கையசைத்தாள். வண்டி குலுங்கிக் குலுங்கிச் சென்றது. அந்தக் கொட்டும் பனியிலும் அவன் தாய் அவனையே பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. தூரம் அதிகமாக அதிகமாக அவள் உருவம் மங்கத்தொடங்கியது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் போய்க்கொண்டிருக்கும் குதிரைவண்டி அவள் பார்வையிலிருந்து மறையத்தொடங்கும். அவள் தான் உறங்குவதற்கு ஏற்ற இடம் ஒன்றினைத் தெரிவு செய்து தன் அழுக்குப் பையைத் தலைக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு உறங்கிப்போவாள். ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கு ஒருமுறையும் குதிரைவண்டியின் சத்தம் கேட்கும் போதோ அல்லது ஏதாவது ஒரு வண்டியின் உருள் சத்தம் கேட்கும்போதோ வருவது தன்னுடைய மகன் யோகோதானா என்று எழும்பி எழும்பிப் பார்ப்பாள். ஒரு இரண்டு நாள் வரை எப்படியும் தன் மகன் தன்னை அழைத்துப்போக வந்துவிடுவான் என்றே நம்பிக் கொண்டிருப்பாள். இரண்டாவது நாளின் முடிவிலோ அல்லது மூன்றாவது நாளின் தொடக்கத்திலோ மகன் இனி வரவே மாட்டான் என்கிற உண்மை அவளுக்குத் தெரியவரும். 

3.
அந்த வீதி நீளமாக இருந்தது. அது மாசி மாத ஆரம்பம் என்பதால் பனி நான்கு இன்ச் அல்லது ஐந்து இன்ச் அளவிற்கு கொட்டி இருக்கவேண்டும். குதிரையின் காலடித் தடங்களும், அவை இழுத்துவந்திருந்த கூட்சு வண்டிகளின் சக்கரத் தடங்களும் வெள்ளைத்தாளில் வரையப்பட்டிருந்த புரியாத ஓவியங்களைப் போல் குறுக்கும் நெடுக்குமாக நீண்டிருந்தன. அந்த வீதியில் நடந்துபோகும் ஒருவர், கொஞ்சம் நிதானித்துத் தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கேட்பாராக இருந்தால் …அந்தக் காட்டுப்பகுதியில் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு தங்களின் இரைகளுக்காகப் பெருங்குரலெடுத்துத் திரியும் ஒளியுடன் கூடிய கண்களைக் கொண்ட ஓநாய்களின் குரூரமான ஊளைச் சத்தத்தைக் கேட்க முடியும்.  அந்தவீதியில்தான் ஒரு கூட்சு வண்டி அவசரமில்லாமல் வந்துகொண்டிருந்தது. கிழட்டுக் குதிரை என்பது அதன் நடையிலேயே தெரிந்துபோனது. தனக்கும் வலிக்காமல் நிலத்துக்கும் வலிக்காமல் என்று சொல்வார்களே அதைப்போல் நிதானமாக, வெகு நிதானமாக நடந்து வந்துகொண்டிருந்தது. இன்னும் ஓரிரு வருடங்களில் செத்துவிடலாம். அல்லது இனி இதை வைத்துத் தொழில் நடத்த முடியாது என்று எப்போது அதன் சொந்தக்காரருக்குத் தெரியவருகிறதோ அப்போது அது ஏதாவது ஒரு கசாப்புக் கடைக்காரனுக்கு அடிமட்ட விலையில் போய்ச் சேர்ந்துவிடலாம். நிச்சயமாக சொல்வதற்கில்லை. கூட்சு வண்டியை ஓட்டி வந்தவருக்கும் வயது அதிகம் இருக்கும். குத்துமதிப்பாக சொல்லப்போனால் எழுபது அல்லது எழுபத்தியொன்று. குளிரைத் தாங்கக் கூடிய பழைய மொத்தமான அங்கி ஒன்றினை அணிந்திருந்தார். அதை அவர் வாங்கும் போது நீலமாக இருந்திருக்க வேண்டும். இப்போது நிறம் மாறி ஒருவித பழுப்பு நிறத்தில் இருந்தது. தொக்கையான மனிதர். கைகள் குள்ளமாக, உருண்டையாக இருந்தன. கிட்டே போய் முகர்ந்து பார்த்தால் அவரிடமிருந்து மலையாடு வாசனை வரும்போல் தோன்றியது. தன் வேலையையும் சேர்த்துத் தன் குதிரை கவனித்துக்கொள்ள இவர் நிம்மதியாக அடிக்கொரு தடவை தூங்கியவண்ணம் இருந்தார். அனேகமாக இந்த வண்டி கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்திலிருந்து தன் பயணத்தைத் தொடங்கி, மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்துக்கோ அல்லது நகரத்துக்கோ சென்று கொண்டிருக்கலாம். அந்த வண்டிக்குள்தான் போர்வை ஒன்றினால் தன் உடம்பு முழுக்கப் போர்த்திக்கொண்டு விளாமிடிர் யோகொவிச் உட்கார்ந்திருந்தான்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top